இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனல்டு டிரம்ப் பதவி ஏற்றதும் விலை குறையும் என்று நினைத்த மக்களுக்கு, இந்த விலை ஏற்றம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
தங்கத்தின் விலை அண்மைக்காலமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களுக்கும் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக இருந்து வந்தது. இருப்பினும் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றவுடன் தங்கம் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூ 7,450 என விற்பனையானது. அதாவது ஒரு சவரன் ரூ. 59,600க்கு விற்பனையானது. இந்தநிலையில் இன்றைய தினம், வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அந்தவகையில் இன்று தங்கம் ஒரு கிராம் ரூ 75 உயர்ந்து ரூ 7,525 என விற்பனை ஆகிறது. அதாவது ஒரு சவரனுக்கு ரூ 600 உயர்ந்து ரூ 60,200-க்கு விற்பனை ஆகிறது. 60 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது மக்களிடம் தங்கத்தின் தூரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.