வணிகம்

சென்னை: அட்சய திருதியை- இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் எவ்வளவு தெரியுமா?

நிவேதா ஜெகராஜா

அட்சய திருதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.

அட்சய திருதியை இந்துக்கள் வழிபடும் புனித நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை, அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தங்கம் உட்பட எந்தப் பொருள் வாங்கினாலும் அது மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. மேலும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செழிப்பும் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியன்று வாங்கப்படும் தங்கத்தின் மதிப்பு குறையாது என்றும், தொடர்ந்து மதிப்பு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் இந்த நாளில் தங்கத்தின் விலை உயர்வை நோக்கியே இருக்கும்.

இந்நிலையில் அட்சய திருதியை நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து 4,816 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 38,528 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 67 ரூபாயாக உள்ளது. அட்சய திருதி நாளான இன்று தங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்படுகின்றது.