வணிகம்

ஏப். 15க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை-சென்னை மாநகராட்சி அறிவிப்பின் முழு விவரம்

நிவேதா ஜெகராஜா

சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் நடப்பு நிதியாண்டின் `முதல் அரையாண்டு சொத்து வரி’யை, வரும் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 விழுக்காடு ஊக்கத்தொகை வழங்கப்படுமென சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே மாநகராட்சிக்கு செலுத்தி வந்த விகிதத்திலேயே சொத்துவரியை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வரும் 15 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்த தவறினால் 2 விழுக்காடு அபராதத் தொகையுடன் சொத்துவரி வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறுசீராய்வுக்குப் பிறகான சொத்து வரி கட்டணம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள், மண்டல அலுவலகங்கள், வாா்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் அல்லது டெபிட் காா்டு ஆகியவற்றின் வாயிலாகவும், மாநகராட்சி வரி வசூலிப்பாளா்கள், உரிம ஆய்வாளா்கள் மூலமும் வரி செலுத்தலாம்.

சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரையில் சீராய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய சொத்து வரி தொடா்பாக மன்றத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும். எனவே, 2022-23-ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏற்கெனவே மாநகராட்சிக்குச் செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே ஏப்ரல் 15-க்குள் செலுத்தலாம். தவறுவோருக்கு 2 சதவீதம் அபராதத் தொகை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.