வணிகம்

உயர்த்தப்படுமா வருமானவரி உச்சவரம்பு? எகிறும் எதிர்பார்ப்பு

Rasus

வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு ரூ.4 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் தாக்கலாகும்போது நடுத்தர மக்களின் எதிர்பார்பாக இருப்பது, இந்தாண்டாவது வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்பதே ஆகும். கடந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதே அதன் வரம்பு ரூபாய் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால் நிதியமைச்சர் அருண்ஜேட்லி அதுகுறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் பட்ஜெட் உரையை முடித்துக்கொண்டார். இதனால் வருமான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு தற்போது ரூ.2.5 லட்சமாகவே உள்ளது.

இந்நிலையில் 2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் வருமான வரி உச்சவரம்பு ரூ.4 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நிதிநிலை அறிக்கைத் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவும், பொருட்கள் விலையேற்றம் போன்றவற்றை கருத்தில் கொண்டு வருமான வரி உச்சவரம்பை ரூ 5.லட்சம் வரை படிப்படியாக உயர்த்தலாம் என்றும், உடனடியாக ரூ3.லட்சம் வரை உயர்த்தி அறிவிப்பு வெளியிடலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்தாண்டின் பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு நிச்சயம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.