வணிகம்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவு

நிவேதா ஜெகராஜா

மத்திய அரசின் சமூக பாதுகாப்புச் சட்டம் பிரிவு 142-ன்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுத்தல், ஓய்வூதியம் பெறுதல், காப்பீட்டு பலன்களைப் பெற ஆதார் எண்ணை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நிறுவன முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களின் ஆதார் எண்ணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

எனவே, அனைத்து நிறுவன முதலாளிகளும் தங்களது ஊழியர்களின் ஆதார் எண்ணை, வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இந்தக் கால அவகாசத்துக்குள் நிறுவன முதலாளிகள் இப்பணியை செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம் ஊழியர்களுக்கும், நிறுவன முதலாளிகளுக்கும் தடையில்லா சேவை வழங்க முடியும். மேலும், வருங்கால வைப்புக் கணக்குத் தாக்கல் செய்யும் பணியானது, அயல்பணி மூலம் வெளிநபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அப்பணியை செய்யும் ஒப்பந்ததாரர்கள் விவரத்தை நிறுவன முதலாளிகள் தங்களது இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பாரத் கா அம்ருத் மகோத்சவ் திட்டத்தின் கீழ், ஊழியர்கள், மின்னணு முறையில் நாமினேஷன் தாக்கல் செய்வது குறித்து நிறுவன முதலாளிகள் தங்களது ஊழியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கான வசதி உறுப்பினர்களின் இணைய பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்கு பண உதவி தேவைப்படும் போது, அவர்களே எளிதாக இபிஎஃப்ஓ நிறுவனத்தின் சேவையை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தத் தகவல், மண்டல அலுவலக (தெற்கு), வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.