வணிகம்

10 நாட்களில் ரூ.1.15 உயர்ந்த முட்டை விலை - என்ன காரணம்?

Veeramani

நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து வேகமாக முட்டை விலை உயர்ந்து வருகிறது, கடந்த 10 நாட்களில் ஒரு ரூபாய் 15 காசுகள் விலை உயர்ந்து 4 ரூபாய் 75 காசுகளுக்கு முட்டை விற்பனையாகிறது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை  4 ரூபாய் 50 காசுகளிலிருந்து ஒரே நாளில் 25 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 75 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில்  கடந்த  9-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 60 காசுகளாக இருந்த  நிலையில் கடந்த 9-ம் தேதி 5 காசுகளும், 12-ம் தேதி 25 காசுகளும், 14-ம் தேதி 25 காசுகளும், 16-ம் தேதி 35 காசுகளும் விலை  உயர்த்தப்பட்டு  4 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மீண்டும்  25 காசுகள் பண்ணை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 75 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.  



கடந்த 10 நாட்களில்  ஒரு ரூபாய் 15 காசுகள் விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும் போது, கோடை காலத்தை ஒட்டி அதிகளவு வயதான கோழிகள் விற்கப்பட்ட நிலையில் முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், காய்கறி விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விற்பனை தொடர்ந்து வேகமாக அதிகரித்து தேவை ஏற்பட்டதோடு, வட மாநிலங்களிலும்  விலை  தொடர்ந்து உயர்ந்து வருவதால்  தமிழகத்திலும் விலை வேகமாக உயர்த்தப் படுவதாகவும், வரும் நாட்களில் இவ்விலை நீடிக்கவே வாய்ப்புகளே உள்ளதாகவும் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.