வணிகம்

டீசல் விலை உயர்வு எதிரொலி - சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை அதிகரிப்பு

Veeramani

டீசல் விலை உயர்வால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை அதிகரித்திருக்கிறது.

கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள், பெரும்பாலும் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு போன்ற காரணங்கள் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். வரும் நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.



வழக்கமாக 10 லாரிகளில் வந்த பீன்ஸ், தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக விளைச்சல் குறைந்ததால், மூன்று லாரிகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 20 ரூபாயாக இருந்த ஒரு கிலோ அவரைக்காய் தற்போது 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேபோல, தக்காளி விலை 10 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் சராசரியாக 5 ரூபாய் முதல் 15ரூபாய் வரை அதிகரித்துள்ளது.