வணிகம்

செப்டம்பர் வரை வீட்டில் இருந்தே வேலை: கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டம்?

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் கொரானா இரண்டாம் அலை இன்னும் சரிவை நோக்கி செல்லவில்லை. ஆனால் டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் மற்ற நகரங்களில் பாதிப்பு சரிவை நோக்கி செல்கிறது. இருந்தாலும் செப்டம்பர் வரை வீட்டில் இருந்து வேலை செய்யவே முக்கிய நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.

ஐடிசி, மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், பிளிப்கார்ட், நெஸ்லே, டொயோடோ கிர்லோஸ்கர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அமேசான், கோத்ரெஜ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அலுவலகத்தை திறப்பதற்கு ஆர்வம் காண்பிக்கவில்லை.

ஜூன் மாதத்தில் பல மாநில அரசுகள் அலுவலகத்தை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தாலும் செப்டம்பர் வரை வீட்டில் இருந்தே பணி செய்ய பல கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

தொற்று விகிதம் எப்படி இருக்கிறது. தடுப்பூசி எவ்வளவு நபர்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது, மூன்றாம் அலை உருவாகுமா இல்லையா என்பதை வைத்தே அலுவலகம் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

தொழிற்சாலைகள் அவசியம் என்பதால் தொழிற்சாலை சார்ந்த பணிகளில் எந்தவிதமான தேக்கமும் இருக்காது. ஆனால், வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்க இருப்பதாக மனிதவள பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என நினைக்கும் நிறுவனங்கள், இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியவர்கள் மட்டுமே அலுவலகம் திரும்புவதற்கு முன்னுரிமை கொடுக்கும் எனத் தெரிகிறது.

சர்வதேச அளவில் பாதிப்பு குறைந்தாலும் வீட்டில் இருந்து வேலை செய்வதை பல நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. இதற்கு நிறுவனங்களின் செலவுகள் குறைவதும் கூட ஒரு காரணமாக சொல்லலாம்.

கூகுள் நிறுவனம் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை கொண்டுவந்ததால் கடந்த ஆண்டில் 100 கோடி டாலர் அளவுக்கு மீதமாகி இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அதனால் 20 சதவீத பணியாளர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்றுவாரக்ள் என்றும் அறிவித்திருந்தது கூகுள்.

- வாசு கார்த்தி