வணிகம்

பொருளாதார ஆய்வறிக்கையை தயார் செய்யும் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்? யார் இவர்?

webteam

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்குவது தொடங்கி, பொருளாதார ஆய்வறிக்கையை தயார் செய்வது வரை முக்கிய நபராக விளங்குகிறார் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறந்து கான்பூர் ஐஐடியில் பொறியியல் மற்றும் கல்கத்தா ஐஐஎம்-இல் தொழில் மேலாண்மை மேல்படிப்பு உள்ளிட்ட படிப்புகளை முடித்த கிருஷ்ணமூர்த்தி, நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் வழிகாட்டுதல்படி நிதி பொருளாதார துறையில் தனது ஆராய்ச்சியை நடத்தி முடித்து டாக்டர் பட்டம் பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆப் பிசனஸில் நிதி பொருளாதாரத்தில் பிஹெச்டி பட்டம் பெற்ற இவர், ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்ற பிறகு எகனாமிக் சர்வே என்று அழைக்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கை நவீன அம்சங்களுடன் உருவாக்கப்படுகிறது.

குறிப்பாக சென்ற வருடம் இவர் "தாளினாமிக்ஸ்" என்கிற தலைப்பில் உணவுப் பொருட்களின் விலை அரிசி, பருப்பு, காய்கறிகள் என்று ஒவ்வொரு பொருளாக தனித்தனியாக பார்க்காமல் ஒரு முழுச் சாப்பாடு என்ன விலை என்பதை அலசிப் பார்க்க வேண்டும் என்று புதிய கோணத்தில் உணவுப் பொருள் விலையை பற்றி விளக்கியிருந்தார்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து எவ்வாறு இந்தியா மீண்டு வருகிறது என்பது குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் விரிவாக விளக்கியுள்ளார்