சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கடந்த ஆண்டு வலியுறுத்தியது. ஆனால் இறக்குமதியை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவகாசம் கேட்டதால் தடைக்கான கெடுவை மே 2ம் தேதி வரை அமெரிக்கா நீட்டித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு நெருங்கி வருவதால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 2 ம் தேதிக்கு பிறகும் கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடரும் நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்தியா வாங்கும் ப்ரெண்ட் (BRENT) வகை கச்சா எண்ணெய் விலை லண்டன் சந்தையில் பீப்பாய்க்கு 75.42 டாலரை எட்டியுள்ளது. ஈரானிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரும் மே 1ம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் திட்டவட்ட அறிவிப்பே அதன் விலை உயரக் காரணமாக உள்ளது. ஏற்கெனவே எண்ணெய் வள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாடும் சேர்ந்து கொண்டது கச்சா எண்ணெய் விலை வெகுவேகமாக உயரக் காரணமாக அமைந்துள்ளது. இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு உள்ளாகியுள்ளது.