வணிகம்

சென்னை: அமேசானின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சங்கீதா

சென்னையில் அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

கடந்த 24-ம் தேதி துபாய் மற்றும் அபுதாபிக்கு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாட்கள் அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். துபாயில் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொண்டு தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார். பின்னர், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.

இதன் பின்னர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர், தமிழகத்திற்கு வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அபுதாபியிலும், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. 4 நாள் பயணத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு துபாயில் இருந்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை பெருங்குடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். 8.3 லட்சம் சதுர அடி பரப்பளவில், 18 தளங்களுடன் 6 ஆயிரம் பணியாளர்களை உள்ளடக்கிய அமேசான் நிறுவனத்தின் நான்காவது அலுவலகம் இதுவாகும். 

இதன் மூலம் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது மட்டுமன்றி அமேசான் நிறுவனத்தின், மின் உபகரணங்களை உற்பத்தி செய்யும் மையம் ஒன்றும் சென்னையில் செயல்பட்டுகிறது. இந்தியாவிலயே அமேசானின் 2-வது பெரிய அலுவலகம் என்றால், ஹைதராபாத்திற்கு அடுத்து சென்னையில் உள்ள இந்த அலுவலகம் தான்.