வணிகம்

ரூ.1680 கோடி முதலீடு: இந்தியாவில் பலமாகக் கால் பதிக்கும் அமேசான்

Rasus

சர்வதேச இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேலும் பலமாக்க ரூ.1680 கோடியை முதலீடு செய்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனங்களாக பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க அமேசான் நிறுவனம் இந்தியாவில் 1680 கோடியை முதலீடு செய்துள்ளது. கடந்த 2013-ஆண்டு இந்தியாவில் தனது சேவையை தொடங்கிய அமேசான் இந்த ஆண்டில் மொத்தமாக 5 பில்லியன் டாலரை(ரூ.32,295 கோடி) முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதன் சக போட்டியாளராக கருதப்படும் ஃப்ளிப்கார்ட் இந்தாண்டு இதுவரை 1.4 பில்லியன்  டாலரை (9070 கோடி) முதலீடு செய்திருக்கிறது.

இது குறித்து அமேசான் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இ-காமர்ஸ் வர்த்தகத்தில் இந்தியா மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். அதன் அடிப்படையிலேயே முதலீடு செய்கிறோம் என்றார். பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகள், தளவாடங்களை வலுப்படுத்துதல், தயாரிப்பு பொருட்களை மேலும் அதிகப்படுத்துதல் ஆகியவற்றிற்கு இந்த முதலீட்டைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதமும் இந்தியாவில் 3 பில்லியன் டாலரை (ரூ.19,437 கோடி) இந்தியாவில் அமேசான் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.