Amazon-vodafone
Amazon-vodafone File image
வணிகம்

11,000 பேரை வெளியே அனுப்பும் வோடஃபோன் - இந்திய ஊழியர்கள் 500 பேரை பணிநீக்கம் செய்த அமேசான்!

சங்கீதா

பொருளாதார நெருக்கடி உட்பட பல்வேறு காரணங்களால் செலவை குறைக்கும் வகையில், கூகுள், மெட்டா, ட்விட்டர் உள்பட உலகளவில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்த நிலையில், தற்போது பணிநீக்க நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதில், இணைய சேவைகள் (Amazon Web Services-AWS), மனித வளம் (People Experience and Technology Solutions-PXT or Human Resources -HR) மற்றும் சப்போர்ட் வெர்ட்டிக்கல்ஸ் (support verticals) ஆகியப் பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Amazon

குறிப்பாக, இப்பிரிவுகளில் இந்தியாவில் வேலைப் பார்த்து வந்த ஊழியர்கள் 500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களில் இந்த பணிநீக்கம் நடவடிக்கை நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அமேசான் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும், இரண்டாவது கட்டமாக 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமேசானை தொடர்ந்து பிரிட்டிஷ் நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன், அடுத்து வரும் 3 ஆண்டுகளில் உலகளவில் சுமார் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வோடஃபோன் நிறுவனப் பங்குகளின் விலை, 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதால், அந்நிறுவனத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் வகையில், மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் தனது வணிகத்தை மறுசீரமைத்து வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த முடிவு செய்துள்ளதை அடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை வோடஃபோன் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான Margherita Della Valle தெரிவித்துள்ளார்.