11 உறுப்பு நாடுகள் 10 கூட்டு நாடுகளை உள்ளடக்கி, பல்வேறு பெரு நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றிருக்கும் மாநாடுதான் பிரிக்ஸ் 18 ஆவது உச்சி மாநாடு. டெல்லி பாரத் மண்டபத்தில் நடக்கும் மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நேற்றும் இன்றும் மாநாடு நடைபெறும் நிலையில், உலகின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருக்கும் தலைவர்களுக்காக பிரதமரின் தரப்பில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் திணை புலாவ், பனீர் லபாப்தர், ஓல்ட் டெல்லி ஃப்ரூட் க்ரீம் வித் ஜிலேபி உள்ளிட்ட பல இந்திய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகளுடன் இரவு விருந்துதொடங்கிய நிலையில், பிரதமரின் பிரமாண்ட இரவு விருந்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ப்யூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரும், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் இந்த இரவு விருந்தில் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்திருக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதமரின் இரவு உணவை புறக்கணித்துவிட்டு தனது ஹோட்டல் அறைக்குச் சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவருக்கொருவர் முழுமையான ஆதரவு தெரிவிக்க வேண்டுமென மாநாட்டில் பேசிய சீன அதிபர், இரவு உணவை புறக்கணித்தது அரசியலாக்கப்படும் நிலையில், ஓய்வெடுப்பதற்காகவே அவர் தனது அறைக்குச் சென்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமதுவும் மாநாட்டில் பங்கேற்ற பிறகு நேற்று மதிய வேளையிலேயே நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.