விவசாயம்

கடந்த பத்தாண்டுகளில் பாதிக்குமேல் குறைந்த உர மானியம்

JustinDurai
கடந்த பத்தாண்டுகளில் உரங்களுக்கான மானியத்தை மத்திய அரசு பாதிக்கும் மேல் குறைத்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டில் ஒரு டன் பொட்டாஷுக்கு 16 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது, ஆறாயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துக்கு தேவையான உரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. உரங்களின் சத்து அடிப்படையில் ஆண்டுதோறும் மானியம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி 2011-12 ஆம் ஆண்டில் ஒரு டன் பொட்டாஷ் உரத்துக்கு ரூ.16,005 மானியம் அளிக்கப்பட்டது. 2012-13 ஆம் ஆண்டில் அது 14,400 ரூபாயாக குறைக்கப்பட்டது. அடுத்த நிதியாண்டில் 11,300 ரூபாயாக மேலும் குறைக்கப்பட்டது.
2014-15-ல் 9,300 ரூபாயக இருந்த மானியம் தொடர்ந்து குறைக்கப்பட்டு 2021-22 ஆம் ஆண்டில் 6,070 ரூபாயாக அதாவது கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 7 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட 50 கிலோ மூட்டை பொட்டாஷ் உரம், தற்போது 1,700 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே, விவசாய உற்பத்திக்கான பொருட்செலவை கணக்கில் கொண்டு, உர மானியத்தை அதிகரித்து தரவேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.