விவசாயம்

தெளிப்பா, நடவா என்ற குழப்பத்தில் விவசாயி‌கள்

webteam

வறட்சி காரணமாக குறுவை சாகுபடியை இழந்த டெல்டா பாசன விவசாயிகள், அவ்வப்போது பெய்துவரும் மழை காரணமாக தெளிப்பா, நடவா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் டெல்டா மாவட்டங்களில் முன் தயாரிப்பு கூட்டம் நடத்தப்படுமா என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து விளைநிலங்களை ஈரப்படுத்தியுள்ளது. வழக்கமாக அக்டோபர் மாதம் மத்தியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். அதற்கு முன்பாக பயிர் வளர்ந்தால்தான், மழையால் பாதிக்கப்படாமல் பயிரை பாதுகாக்க முடியும். அதற்கு தற்போதைய நாளை கணக்கிட்டால் 150 நாள் வயதுடைய சிஆர்1050 போன்ற ரகங்களை இனி பயிரிடமுடியாது. அதேநேரத்தில் குறுகிய கால ரகங்களை பயிரிட வேண்டுமானால், மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு எப்போது என்று தெரியாத நிலை நிலவுகிறது

இதுகுறித்து விவசாயி செந்தில்குமார், மேட்டூர் அணையில் எப்போது தண்ணீர் தி‌றப்பு இருக்கும்? தெளிப்பு செய்யலாமா அல்லது நடவு செய்யலாமா என்ற ஆலோசனையும் வழங்காமல் வேளாண்மைத்துறை உள்ளதாக கூறினார்.

சாமியப்பன் கூறும்போது, சம்பா சாகுபடி காலம் நெருங்கிவிட்ட நிலையில் மேட்டூர் அணைதிறப்பு தேதியை முன்கூட்டியே அறிவித்தால் விவசாயிகள் சாகுபடிக்கு தயாராக வாய்ப்பாக இருக்கும். இதற்கு ஏற்ப உடனடியாக சம்பா சாகுபடி முன்தயாரிப்பு கூட்டங்களை நடத்தவேண்டும் என்று கூறினார்.