விவசாயம்

வேளாண் பட்ஜெட் 2021-22: இலவச மின்சாரத் திட்டத்திற்கு ரூ.4,508 கோடி நிதி ஒதுக்கீடு

JustinDurai
விவசாயத்திற்கான இலவச மின்சாரத் திட்டத்திற்காக மின் வாரியத்திற்கு ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் ஒரு பகுதியாக, விவசாயத்திற்கான இலவச மின்சாரத் திட்டத்திற்காக மின் வாரியத்திற்கு ரூ.4,508 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூரிய சக்தியால் இயங்கும் 5,000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும் என்றும் சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான மானியத் திட்டம் ரூ.114.68 கோடி செலவில் செயல்படுத்தப்படும் எனவும் வேளாண் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் மோட்டார் பம்புசெட் மானியத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு பம்பு செட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரத்தை அரசே மின் வாரியத்திற்கு செலுத்தும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.