விவசாயம்

நெற்பயிரை காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்

நெற்பயிரை காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்

JustinDurai
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
திருவாரூர் மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரினை காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டுக் கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 செலுத்த வேண்டும். சம்பா,தாளடி நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.11.2021 என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.
சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் சம்பா, தாளடி நெல் பயிரினை காப்பீடு செய்துக் கொள்ளலாம். கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே, விவசாயிகள் இறுதி நேரம் வரை பிரிமீயம் செலுத்த காத்திருக்காமல் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்னரே விரைவில் இத்திட்டத்தில் தங்களது பயிர்களை காப்பீடு செய்துக் கொள்ள திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.