விவசாயம்

"பாஜகவுடனும் நிற்கிறேன், விவசாயிகளையும் ஆதரிக்கிறேன்!” - சன்னி தியோல் 'டபுள் ரோல்'

sharpana

பாலிவுட் நடிகரும், பாஜகவின் குர்தாஸ்பூர் எம்.பியுமான சன்னி தியோல், "நான் பாஜகவுடனும் விவசாயிகள் பக்கமும் நிற்கிறேன்" என்று இரட்டை நிலைப்பாட்டில் கருத்தை தெரிவித்துள்ளது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.


மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 13 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். இந்தச் சட்டங்களின் பாதகங்களை உணர்ந்து முதலில் கடுமையான எதிர்த்தவர்கள் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள்தான். அதனால்தான், பஞ்சாபின் முக்கியக் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் பாஜக கூட்டணியில் உணவு மற்றும் பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விவசாயிகள் பக்கம் நின்றார்.

(ஹர்சிம்ரத் கவுர் பாதல்)

அதோடு, சமீபத்தில் ஹரியானா மாநில பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பஞ்சாபைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ‘நான் பாஜக பக்கமும் நிற்கிறேன்; விவசாயிகள் பக்கமும் நிற்கிறேன்’ என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

(சன்னி தியோல்)

”நான் பாஜக பக்கமும் நிற்கிறேன். விவசாயிகள் போராட்டத்தையும் ஆதரிக்கிறேன். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியப்பின் அரசு சரியான நடவடடிக்கை எடுக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. பாஜக விவசாயிகள் நலனில் அக்கறைக்கொண்டது. இது எங்கள் நாட்டின் விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனை. இதில் யாரும் தலையிட வேண்டாம். இப்பிரச்சனையில் பலர் நன்மைகளை அடைய முயன்று பிரச்னைகளை உருவாக்க முயல்வதை நான் அறிவேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், அவரின் இந்த ட்விட்டை ’சன்னி தியோல் இரட்டை முகம் கொண்டவர், முதுகெலும்பில்லாதவர்’ என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும் மீம்ஸ்களாக கலாய்த்தும் வருகிறார்கள்.