கரும்பு நிலுவைத்தொகை தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகையில் 110 கோடி ரூபாய், வரும் திங்கள்கிழமைக்குள் வழங்கப்பட உள்ளது. சென்னையில் தொழில்துறை அமைச்சர் எம்.பிசம்பத், கரும்பு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு பரிந்துரைத்த டன்னுக்கு 125 ரூபாய் என்ற விலையில் இத்தொகை வழங்கப்பட உள்ளது. தீபாவளிக்கு பின்பு மீதமுள்ள நிலுவைத் தொகை குறித்து முத்தரப்பு கூட்டம் நடத்தி முடிவெடுக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் கூட்டுறவு ஆலைகள் நிலுவைத் தொகையில் 12 கோடியே 26 லட்சம் ரூபாயை தீபாவளிக்கு முன்பே விவசாயிகளுக்கு வழங்குவது எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.