விவசாயம்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்வு – மகிழ்ச்சியில் விவசாயிகள்

webteam

142 அடியாக உயர்ந்த முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் பென்னிகுக் உருவப்படத்திற்கு விவசாயிகள் மரியாதை செலுத்தினர்.

தேனி . மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல். உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஐந்தாவது ஆண்டாக 142 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து தேனி மாவட்டம் கம்பம் தமிழக பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

தண்ணீர் தேங்குவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக பொதுப் பணித்துறை அலுவலக ஊழியர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர். அதோடு சின்னமனூர் அருகே பாலர்பட்டியில் விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர்கள், முல்லைப் பெரியாற்றில் மலர்கள் தூவி நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தியதற்கு வரவேற்பளித்தனர்.