விவசாயம்

திட்டங்களுக்கு எதிராக போராடினால் வெளி மாநிலத்தவருக்குத்தான் வேலை கொடுப்பார்கள் : உயர்நீதிமன்றம் 

திட்டங்களுக்கு எதிராக போராடினால் வெளி மாநிலத்தவருக்குத்தான் வேலை கொடுப்பார்கள் : உயர்நீதிமன்றம் 

webteam

அனைத்து திட்டங்களுக்கும் எதிராக தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதால் தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் வெளிமாநிலத்தவர் நியமிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பேருந்து நிலையம் அருகே வரும் 7 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி அமமுக கடலூர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறிவிடும் என தெரிவித்தார். 
அதை ஏற்காத நீதிபதி, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த போவதில்லை என தமிழக அரசு தெரிவித்து விட்டது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன உள்ளது?”

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடாமல், அது நடைமுறைப்படுத்த உள்ள இடத்திற்கு எதிராக போராடலாமே?
வேலைக்கு பின்னர் போராட்டங்கள் என்ற நிலை மாறி, போராட்டங்கள் செய்வதே தற்போது முழு நேர வேலையாக மாறிவிட்டது. ஒரு திட்டத்துக்கு எதிராக போராடும் மக்கள் அந்த திட்டத்தால் என்ன நன்மை ஏற்படும்? 
தீமை என்ன என்பது தெரியாமல் அரசியல் கட்சியினர் அழைப்பை ஏற்று போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர்” எனவும் நீதிபதி கூறினார். 

தமிழக இளைஞர்களை வேலைக்கு செல்லவே ஊக்கப்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினரின் போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு அல்ல. எல்லா திட்டங்களுக்கு எதிராகவும் போராட்டம் செய்தால் எப்படி உற்பத்தி அதிகரிக்கும், லாபகரமான மாநிலமாக தமிழகம் மாறும். அனைத்து திட்டங்களுக்கும் எதிராக தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், இங்குள்ள வேலைகளில் வெளிமாநிலத்தவர்கள் நியமிக்கப்படுவதாக கருத்து தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஜூலை 1 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.