விவசாயம்

மயிலாடுதுறை: மறைமுக ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான பருத்தி; விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை: மறைமுக ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான பருத்தி; விவசாயிகள் மகிழ்ச்சி

kaleelrahman

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் 3600 குவிண்டால் பருத்தி ரூ.2 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது. மத்திய அரசின் ஆதார விலையைவிட கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4586 ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் மற்றும் சீர்காழியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3,600 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்தனர். இந்த ஏலத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாருர், தேனி, ஆத்தூர், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர்.

இந்த ஏலத்தில் பருத்தி, மத்திய அரசின் அதிகபட்ச ஆதாரவிலையான ரூ.5,825-ஐவிட குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 7,399 ரூபாய்க்கும், சராசரியாக 6,980 ரூபாய்க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இந்த ஏலத்தில் மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்புடைய பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. மத்திய அரசின் ஆதாரவிலையை விட அதிக விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.