விவசாயம்

‘ஹோட்டல், மார்க்கெட் இல்லை’: நிலத்திலேயே வாடும் வாழை இலைகள் - துயரத்தில் விவசாயிகள்

webteam

ஊரடங்கு உத்தரவால் மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருப்பதால் திண்டுக்கல்லில் வாழை இலை விவசாயிகள் வருமானத்தை இழந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் உள்ள வாழை இலை மார்க்கெட்டிலிருந்து தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாழை இலை கட்டுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவிக்கப்பட்ட வாழை இலைகளை வத்தலகுண்டு மார்க்கெட்டுக்கு அனுப்புவர். 144 தடை உத்தரவால் தற்போது அந்த மார்க்கெட்டுகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அத்துடன் ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுவதும் உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் கூடுவதற்கு தடை இருப்பதால், வாழைஇலையின் தேவையில்லாமல் போய்விட்டது. எனவே விவசாயிகள் மரங்களில் இருந்து வாழை இலைகளை அறுக்காமல் உள்ளனர். இதனால் இலைகள் வளர்ந்தும், காற்றில் கிழிந்தும் காணப்படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இலைகளை அறுத்து மார்க்கெட்டுக்கு அனுப்பும் விவசாயிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. வாழை மார்க்கெட்டில் லட்சக்கணக்கான ரூபாய் வாழை இலை விற்பனை தேக்கம் அடைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதனை கருத்தில் கொண்டு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.