விவசாயம்

கன்னியாகுமரி: தமிழ் கலாசாரத்தை காக்க மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த மணமக்கள்

kaleelrahman

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக பாரம்பரியத்தை காக்கும் பொருட்டும் மாட்டு வண்டியில் சென்று தம்பதியினர் திருமணம் செய்து வந்தனர்.

திருமணம் என்றாலே ஆடம்பர கார்களின் அணிவகுப்பு என்ற காலம் போய் முன்னோர்களின் வழியான மாட்டுவண்டி, குதிரை வண்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தற்போது இளைஞர்களால் மீண்டும் தளிர்விட துவங்கியுள்ளது. அதன் எடுத்துக்காட்டாக கன்னியாகுமரி மாவட்டம் அயக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மலவிளை பகுதியில் வின்சென்ட் என்பவரின் மகன் விஜூ. வெளிநாட்டில் உள்ள உணவகத்தில் வேலை செய்யும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயசாமிலி என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கபட்டு, இன்று மலவிளையை அடுத்த பெனியல் சிஎஸ்ஐ தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு மணமகன் விஜூ மாட்டு வண்டியில் தேவாலயத்திற்கு வந்து மணமகள் ஜெயசாமிலியை திருமணம் செய்து அதே மாட்டுவண்டியில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் இது குறித்து மணமகன் விஜூ கூறியதாவது, தமிழக பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் காளை மாடுகளை அழியாமல் பாதுகாக்கவும் டெல்லியில் சுமார் 80 நாட்களுக்கு மேலாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் எளிமையான முறையில் விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் காளை மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்ததாக கூறினார்.

உற்றார் உறவினர்கள் புடைசூழ மாட்டுவண்டியில் சென்ற தம்பதியரை அப்பகுதியினர் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.