விவசாயம்

”காட்டுப்பன்றிகளை விரட்டினால் வனத்துறை வழக்குப் பதிவு செய்கிறது” - பழனி விவசாயிகள் வேதனை

webteam

பழனி பகுதி விவசாயிகள் மீது வனத்துறை பதிவு செய்துள்ள வழக்குகள் மற்றும் அபராதம் குறித்த ஆவணங்களை, தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது அதிகரித்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விவசாயிகள் விரட்டினால், வனத்துறையினர் விவசாயிகள் மீது வழக்கப்பதிவு செய்து அபராதம் விதிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில் நெய்க்காரபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று பழனி வனத்துறை அலுவலகத்தில் உள்ள கோப்புகளை இன்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

ழனி சரக வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை அருகிலுள்ள பட்டா நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது அதிகரித்துள்ளது. ஆனால், வனத்துறையினர் பன்றிகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். பட்டா நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விவசாயிகள் விரட்டினால் விவசாயிகள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர்.

இந்நிலையில், வனவிலங்குகளுக்கு எதிரான குற்றவழக்குகள், மரங்கள் கடத்தல் குறித்த வழக்குகள் உட்பட 5 வகையான குற்றம் சாட்டப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று இன்று ஆய்வு மேற்கொண்டதில் , ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் வனத்துறையினர் விவசாயிகளிடம் அபராதம் வசூலித்த பெரும்பான்மையான வழக்குகள் கணக்கிலேயே காட்டபப்டவில்லை என்றும், நடவடிக்கை, வழக்கு என்ற போர்வையில் விவசாயிகளை மிரட்டி அபராதம் என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது" என்றார்.