விவசாயம்

“வெட்கக்கேடானது, முற்றிலும் நியாயமற்றது”-வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்புக்கு கங்கனா காட்டம்

EllusamyKarthik

இந்திய சினிமா நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளிப்படுத்தியுள்ளார் அவர். 

நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டி விவசாயிகள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லி எல்லையில் தற்காலிகமாக முகாம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்து வந்தனர் அகில இந்திய விவசாயிகள். இந்த நிலையில், பிரதமர் மோடி, தனது அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். 

அதையடுத்து, இந்த சட்டத்தை எதிர்த்த பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றது குறித்து நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

“சோகமான, வெட்கக்கேடான, முற்றிலும் நியாயமற்றது…” என மிகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் அவர். 

“ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றாக வீதிகளில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற தொடங்கியுள்ளனர். அப்படியிருக்கும் சூழலில் இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான். இதை இப்படி விரும்பிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார் அவர்.