விவசாயம்

விதை நெல்லுக்காக சாலை ஓரங்களில் நெற்கதிர்களை உலர வைக்கும் விவசாயிகள்!

Sinekadhara

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மழைநீரில் மூழ்கிய நெற்கதிர்களை அறுத்து உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தில் மேலசாக்குளம், ஏனாதி, கிடாத்திருக்கை உள்ளிட்ட பகுதிகளில் மானாவரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது 20 நாட்களுக்கும் மேலாக மழை பெய்துவரும் நிலையில் அறுவடைக்குத் தயாரான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இதனால் கவலை அடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் அடுத்த ஆண்டு நெல் விதை தேவைக்கு அதிக விலைகொடுத்து விதைகளை வாங்க வேண்டும் என்பதால், தற்போது தங்களது வயல்களில் நீரில் மூழ்கியுள்ள நெற்கதிர்களை கொட்டும் மழை என்றுகூட பாராமல் கூலி ஆட்கள் உதவியுடன் அறுத்துவருகின்றனர். அறுத்த நெற்கதிர்களை கட்டில் அமைத்து சேகரித்து, தார்ப்பாய்களை சாலை ஓரங்களில் விரித்து, உலரவைத்து அவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.