விவசாயம்

6 வருடத்திற்கு பின் முழு கொள்ளளவை எட்டிய எழுபள்ளம் ஏரி... கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி

kaleelrahman

ஆறு வருடங்களுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டிய எழுபள்ளம் ஏரி... கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி...

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் எழில்கொஞ்சும் எழுபள்ளம் ஏரி உள்ளது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டும் இந்த ஏரி முழுவதும் நிறைந்து, அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கு பெரிதும் உதவும்.

கடந்த ஐந்து வருடங்களாக கொடைக்கானலில் பெய்யக்கூடிய தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் ஏரியில் நீர் இல்லாமல் வரண்டு காணப்பட்டது. இதனால் தமிழக அரசு குடிமராத்து பணியின் மூலம் ஏரியை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு குடிமராமத்து பணிக்காக 90 லட்சம் ரூபாயை ஒதுக்கியது. அதன்பின் உள்ளூர் மக்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு ஏரியை ஆழப்படுத்தி தூர்வாரும் பணி தொடங்க இருந்த நிலையில் உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தங்களையும் இந்த குழுவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றுகூறி பணியை தொடங்கவிடாமல் தடுத்துவிட்டனர். மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் தூர்வாரும் பணி தொடங்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஆறு வருடங்களுக்குப் பின்னர், கொடைக்கானலில் தென்மேற்கு பருவமழைக்கால சாரல்மழை தொடர்ந்து பெய்துவருவதால் எழுபள்ளம் ஏரி முழுகொள்ளளவை எட்டிள்ளது விவசாயிகளை மகிச்சியில் ஆழ்த்தியுள்ளது. முழு கொள்ளளவை எட்டிய ஏரிக்கு, கிராமமக்கள் மலர்தூவி, வணங்கி பாசனத்தை துவக்கியுள்ளனர்.


தென்மேற்கு பருவ மழைக்கே ஏரி நிறம்பிவிட்டது. இன்னும் வடகிழக்கு பருவமழை இருக்கிறது. ஏரியை முன்னமே தூர்வரியிருந்தால் அதிகப்படியான நீரை சேமித்து வைத்திருக்கலாம் என்று விவசாயிகள் வருத்தத்துடன் கூறினர்.