விவசாயம்

ஈரோடு: மழையிலும், பனியிலும் நெல் மூட்டைகள்... கூடுதல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை!

kaleelrahman

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் ஒரேயொரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே செயல்படுவதால், விவசாயிகள் நெல் மூட்டைகளை களத்தில் போட்டு வைத்துள்ளனர்.

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூர், மாரானூர், பெரியூர் உள்ளிட்ட பகுதியில் விளைந்துள்ள நெற்பயிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. தினந்தோறும் 10 ஆயிரம் மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைக்கிறது. ஆனால் செண்பகபுதூரில் உள்ள ஒரேயொரு நேரடி மையம் மூலம் நெல் கொள்முதல் நடைபெறுகிறது.

தினந்தோறும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் அறுவடையாகும் நிலையில் ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பிற விவசாயிகள் நெல்லை களத்தில் போட்டு காத்திருக்கின்றனர். மழை, பனி போன்ற இயற்கை காரணிகளால் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதற்கு முன்பாக மேலும் இரு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.