விவசாயம்

டெல்லி விவசாயிகள் போராட்ட பாதுகாப்புக்காக காவல்துறை ரூ.7.38 கோடி செலவு: மத்திய அரசு

Veeramani

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணிகளுக்காக டெல்லி காவல்துறை ரூ.7.38 கோடி செலவிட்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2020 முதல் டெல்லி காவல்துறை செலவழித்த தொகை குறித்து திராவிட முன்னேற்றக் கழக எம்பி எம்.முகமது அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், காவல்துறை மற்றும் பொது அமைதி ஆகியவை மாநிலப் பட்டியலின் கீழ் வருகின்றன என்று கூறினார். மேலும், ஒரு வருடமாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் இடங்களில் பாதுகாப்புக்காக டெல்லி காவல்துறை இதுவரை மொத்தம் ரூ.7.38 கோடி செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மத்திய அரசு ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், அந்தந்த மாநில அரசுகள் மற்றும் டெல்லி எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள் விவசாயிகளின் இறப்புகள் மற்றும் அத்தகைய வழக்குகளில் இழப்பீடு தொடர்பான விஷயத்தை கையாளுகின்றன என தெரிவித்தார்.