சசிகலா சட்டப்போராட்டம் நடத்தி வருவதால் அவருக்காக அமமுக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 10 இடங்களில் காணொலியில் நடந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகோண்டனர். இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது அதிமுகவை மீட்டெடுக்க அயராது உழைக்க வேண்டும். டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம், 7 பேர் விடுதலை செய்ய மத்திய மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “3வது அணி இல்லை. அமமுக அமைக்கும் அணிதான் முதல் அணி. எங்களது கட்சியுடன் தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து இப்போது கூற முடியாது. கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என அமமுகவினர் விரும்புகின்றனர்.
சசிகலா சட்டப்போராட்டம் நடத்தி வருவதால் அவருக்காக அமமுக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது.” என்றார்.