பயிர்கள் சேதமடைந்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை
திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த பயிரைக்கண்டு மனமுடைந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
திருவாரூர் மாவட்டம் பெரிய கொருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தட்சிணாமூர்த்தி. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி மேற்கொண்டு வந்தார். வடகிழக்கு பருவமழையால் வயலில் தேங்கிய தண்ணீர் வடியாததால் பயிர்கள் சேதமடைந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி விவசாயி தட்சிணாமூர்த்தி பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
அப்போது அவரது மகன் முருகானந்தம் தந்தையை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இதன்பிறகு, மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தட்சணாமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.