விவசாயிகள் போராட்டம்: தஞ்சையில் மறியல் - 600 பேர் கைது!

விவசாயிகள் போராட்டம்: தஞ்சையில் மறியல் - 600 பேர் கைது!
விவசாயிகள் போராட்டம்: தஞ்சையில் மறியல் - 600 பேர் கைது!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பூதலூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ரயில் மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வடமாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் 15 நாட்களுக்கு மேலாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தஞ்சையில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக தொடர் முற்றுகை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 8ஆம் தேதி பாரத் பந்த் அறிவித்து பல்வேறு போராட்டங்கள் கடையடைப்பு நடைபெற்று வந்த நிலையில், இன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


இதைத் தொடர்ந்து, திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலை, பூதலூரில் மறித்த விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மத்திய உற்பத்தி வரித்துறை அலுவலகத்தை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் விவசாயிகள் முற்றுகையிட பேரணியாக வந்தபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பூதலூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com