தஞ்சை: தொடர் மழையால் உடைந்த கண்மாய் - விவசாய நிலங்களை சூழ்ந்துள்ள வெள்ளம்

தஞ்சை: தொடர் மழையால் உடைந்த கண்மாய் - விவசாய நிலங்களை சூழ்ந்துள்ள வெள்ளம்
தஞ்சை: தொடர் மழையால் உடைந்த கண்மாய் - விவசாய நிலங்களை சூழ்ந்துள்ள வெள்ளம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் கடந்த 5 தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்துவரும் மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதனால் பல்வேறு காட்டாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மகாராஜா சமுத்திரம், நசுவினி ஆறு, அக்னி ஆறு, பாட்டுவனாச்சி ஆறு உள்ளிட்ட பல காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் கரையோரம் உள்ள விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் தஞ்சையை அடுத்த அதினாம்பட்டு கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாமுண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரியின் தென்கரையில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர், கடலை, எள் போன்ற சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் அதினாம்பட்டு, வேங்காரயான்குடி, வல்லூண்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சுமார் 15 வருடங்களாக ஏரி முறையாக தூர்வாரவில்லை என்பதால் தான், உடைப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com