'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்!

'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்!
'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்!

டெல்லி சலோ' போராட்டத்திற்கு ஆதரவாக, தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் களத்தில் நின்று விவசாயிகள் அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து பரவலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த விரிவான தொகுப்பு இதோ...


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்து வந்தாலும், கார்பரேட் நிறுவனங்களின் ஊடுருவலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்புக்குரலும் போராட்டங்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.

அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020: அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020. சட்டத்தின் படி பொதுமக்களின் உணவுத் தேவைக்கான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது அந்த பொருட்களை பதுக்கி வைக்கவோ அல்லது ஏற்றுமதி செய்யவோ இந்தச் சட்டம் தடைவிதிக்கிறது. அதன்படி விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கக் கூடிய பொருட்களை குறைவான விலைக்கு வாங்கும் வியாபாரிகள் அதிக லாபமடைய பதுக்கி வைப்பதோ அல்லது ஏற்றுமதி செய்யவோ தடைவிதிக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டதுதான் அத்யாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020.

விலையுறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்: விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களின் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படும்போது விவசாய பொருட்களின் விலையை உறுதிப்படுத்துவதோடு விவசாயிகளை பாதுகாக்கவும் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறது மத்திய அரசு. அதன்படி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்வதோடு தாங்கள் விளைவிக்கும் பொருட்களை அந்த நிறுவனத்திடமே விற்பனை செய்து கொள்ளலாம் என்கிறது இந்த சட்டம்.

வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாடு சட்டம்: இந்த சட்டத்தின்படி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை இந்தியா முழுவதிலும் உள்ள எந்த மாநில வியாபாரிகளிடம் வேண்டுமானலும் விற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகள் அதிகம் லாபம் பெற முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த மூன்று சட்டத்தின் மூலம் விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் என மூன்று தரப்பினரும் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டம் எதிர்ப்புக்கான காரணம் என்ன?

மாநில அரசின் கீழ் இருக்கும் விவசாயத்தை, புதிதாக இயற்றப்பட்டுள்ள இந்த மூன்று சட்டங்களும் மாநில உரிமையை பறிக்கும் விதமாக அமைந்துள்ளதாக எதிர்கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதேபோல இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எந்த பயனையும் கொடுக்கப் போவதில்லை. மாறாக பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்கள் பயனடையும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டுவரப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


விவசாயிகளின் டெல்லி போராட்டம்: எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள விவசாய சங்கங்களும் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், விவசாயிகளை பாதிக்கக் கூடிய மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென்றும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென்றும் தலைநகர் டெல்லியில் கடந்த ஒருவார காலமாக கடும் குளிரிலும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விளையாட்டில் சாதனை படைத்த வீரர்கள் பெற்ற அர்ஜூனா விருதுகளை திரும்பித் தருவோம் நாங்க விவசாயிகளின் பிள்ளைகள் என அறிவித்துள்ளனர். இந்நிலையில், டெல்லியிpல் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்களும், பல்வேறு அமைப்பினரும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு வருவதோடு ரயில் மறியல் சாலை மறியில் தர்ணா போராட்டமென பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்கள் இங்கே நான்கு நாள்களாகத் தொடர்கின்றன.


தர்மபுரி: தருமபுரி தபால் நிலையம் எதிரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேச வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

நாகப்பட்டினம்: டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் 3-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் குடை பிடித்தவாறு விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.


வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைமை அஞ்சலகம் எதிரே விவசாயிகளை பாதிக்கும் மூன்று அவசர சட்டங்களை திரும்பப் பெறக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கனமழையில் குடைபிடித்துக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் பஞ்சாப் உள்ளிட்ட வடமாநில விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட சிறை அருகே இருந்து பேரணியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் நாற்றுகளை ஏந்தியவாறு இரண்டாவது நாளாக இன்று மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் எதிரில் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறவில்லை எனில், 4 ஆம் தேதி சிவகங்கைக்கு ஆய்வுக்காக வரும் தமிழக முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க போவதாகவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: விவசாயிகளையும், விவசாயத்தையும் முற்றிலும் அழிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்ட மசோதா 2020ஐ திரும்பப் பெறக் கோரியும், தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை பாதுகாத்திடவும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை நசுக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் மக்கள் அதிகாரம், விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


செஞ்சி: தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

விருத்தாசலம்: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாhரம், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு, ஜனநாயக விவசாயிகள் சங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி: பழனியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டபடி பழனி இந்தியன் வங்கியை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்தனர். இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது முன்னால் நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலரும் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்ய வந்த போலீசாருடன் ஒத்துழைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.

அப்போது பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் வேளாண் சட்ட நகல்களை எரிக்க முயன்றதை போலீசார் தடுத்தனர். போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்: இந்திய கம்யூ கட்சியினர் பேரணியாக புறப்பட்டு சத்தியமங்கலம் பஸ்நிலையம் முன் வந்தனர். பின்பு விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் வேளாண் சட்ட திருத்த மசோதா 2020 திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாக இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினர். இதில் சத்தியமங்கலம்,பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருத்தணி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தபால் நிலையம் முன்பு வட்ட செயலாளர் அப்சல் அகமத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் டி.ரவீந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வேளாண் மசோதா சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அந்த போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது உணவு பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமான அத்யாவசிய பொருட்கள் திருத்தச்சட்டதை திரும்பப் பெறவேண்டும் விவசாய விளை பொருட்களை அரசு கொள்முதல் செய்வதை தவிர்க்கும் வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் ஒப்பந்த விவசாயம் மூலம் கார்ப்பரேட்டுக்கு விவசாயிகளை அடிமையாக்கும் வேளாண் ஒப்பந்த பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் மீத போடப்படும் வழக்குகளை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி ஜீயபுரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஜீயபுரம் கடைவீதியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வினோத் மணி தலைமையில் ஊர்வலமாக வந்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சி செய்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். தடுப்பு வேலிகளை தாண்டி மறியலில் ஈடுபட முயற்சி செய்தபோது காவல்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு குண்டுகட்டாக அவர்களை தூக்கிய காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மதுரை: மதுரை ரயில் நிலையம் முன்பாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர். சுமார் அரை மணி நேரம் நீடித்த போராட்டத்தினால் பெரியார் மற்றும் சிம்மக்கலில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தமிழகம் முழுவதுமே பரவலாக களத்தில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com