தஞ்சாவூரில் தவணை கட்டவில்லை என டிராக்டரை வங்கி ஊழியர்கள் பறிமுதல் செய்த நிலையில், டிராக்டர் முன்பு படுத்து விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ்குமார். இவர், கடந்த 2018ஆம் ஆண்டு கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். மூன்று மாதத்திற்கு ஒரு தவணை என 52,000 கட்ட வேண்டும். மொத்தம் 12 மாத தவணையில் 8 மாதம் கட்டியுள்ளார்.
இந்நிலையில், கொரோனா காரணமாக கடந்த இரண்டு தவணைகளை அவரால் கட்ட முடியவில்லை, இதனால் வங்கிக்கு சென்று தவணை கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று விவசாயி சுரேஷ்குமார் வீட்டில் இல்லாதபோது அங்கு வந்த வங்கி ஊழியர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து தகவலறிந்த சுரேஷ்குமார், ஒரு கிலோமீட்டர் தூரம் டிராக்டரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து டிராக்டர் முன்பு படுத்து டிராக்டரை எடுத்து செல்லாதவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், அதிகாரிகளுடன் அவர் இரண்டு மாத தவணை மட்டும்தான் கட்ட வேண்டும். அதற்காக ஏன் டிராக்டரை பறிமுதல் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊர் மக்கள் திரண்டதால் டிராக்டரை விட்டுவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் புகார் அளித்துள்ளார்.