ரப்பர் மரங்களில் இருந்து உதிர துவங்கிய இலைகள்.. வேலையின்றி தவிக்கும் குமரி விவசாயிகள்!

ரப்பர் மரங்களில் இருந்து உதிர துவங்கிய இலைகள்.. வேலையின்றி தவிக்கும் குமரி விவசாயிகள்!
ரப்பர் மரங்களில் இருந்து உதிர துவங்கிய இலைகள்.. வேலையின்றி தவிக்கும் குமரி விவசாயிகள்!

ரப்பர் மரங்களில் இருந்து இலை உதிர துவங்கியதால் குமரி ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தொழிலின்றி தவித்துவருகின்றனர். தொடர்ச்சியாக இலை உதிர்வு காலங்களில் ரப்பர் விவசாயிகள் மூன்று மாதம் தொழில் இன்றி தவிர்ப்பதால் இவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் இலை உதிர்வு காலம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து துவங்குவது வழக்கம். இலை உதிர துவங்கியதும் ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி குறைவதால் ரப்பர் மரங்களில் இருந்து பால் வடிக்கும் தொழில் செய்வதை விவசாயிகள் நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் முழுமையாக இந்த தொழில் முடங்கும். (இந்த ரப்பர் மரங்களில் உள்ள பழைய இலைகள் பழுத்து உதிர்ந்து ஒவ்வொரு மரங்களிலும் புது இலை துளிர்த்து வளர்ந்து அந்த இலை நன்றாக முதிர்ந்து பிறகே பால் உற்பத்தி அதிகரிக்கும்). இந்த மூன்று மாதம் சிறு குறு ரப்பர் விவசாயிகள், ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதனால் ஆண்டுதோறும் இந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வருவாய் இழந்து மூன்று மாதம் தவிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள ரப்பர் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு இந்த மூன்று மாதம் அரசு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு ரப்பர் மரங்களில் இருந்து இலை உதிர துவங்கியதும், இதில் சில மரங்களில் பால் உற்பத்தி குறைந்து பால் வடிக்கும் தொழில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குமரி ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீண்டும் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com