ரூ.1400க்கு விற்ற டிஏபி உரம் தற்போது ரூ.1900-க்கு விற்பனை - பிஆர்.பாண்டியன் கடும் கண்டனம்

ரூ.1400க்கு விற்ற டிஏபி உரம் தற்போது ரூ.1900-க்கு விற்பனை - பிஆர்.பாண்டியன் கடும் கண்டனம்
ரூ.1400க்கு விற்ற டிஏபி உரம் தற்போது ரூ.1900-க்கு விற்பனை - பிஆர்.பாண்டியன் கடும் கண்டனம்

டி.ஏ.பி உர விலை உயர்வை வன்மையாக கண்டிப்பதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் பெய்த பெருமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்கள் முற்றிலும் அழிந்து போயின. 100 சதவீத இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான தொகையும் விடுவிக்கப்பட்டது. முதற்கட்ட தொகை விடுவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 100 சதவீதத்திற்கான தொகையை கணக்கிட்டு முழு தொகையும் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

50 சதவீத விவசாயிகளுக்கு அதற்கான தொகை வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 50 சதவீத விவசாயிகளுக்கு இதுவரையிலும் வழங்கப்படாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டுகிறது. எனவே உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவில் விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகை முழுமையாக சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுகொண்டார்.

மேலும், “விவசாயிகளின் கூட்டுறவு வேளாண் கடன், நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான சான்றுகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளிடம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான நகைகளை விவசாயிகளிடம் வழங்க கூட்டுறவுத்துறை மறுத்து வருவதோடு, தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டுகிறது. தேர்தல் முடிவுற்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்கிற எதிர்பார்ப்பு உள்ள சூழலில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை விடுவிக்காமல் கூட்டுறவுத்துறை மோசடி செய்து விடுமோ? என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள்.

எனவே தேர்தல் ஆணையம் விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு நகைகளை உடன் வழங்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கான இடுபொருட்களின் விலையை உற்பத்தி நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி ஆண்டுதோறும் டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலையை பல மடங்கு உயர்த்தி வருகிறார்கள்.

நேற்று வரையிலும் ஒரு மூட்டை டிஏபி ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது ஆயிரத்து 900 ரூபாய் என விலையை நிர்ணயம் செய்து மூட்டை ஒன்றுக்கு 500 ரூபாயை அதிரடியாக உயர்த்தி அதற்கான விலைப்பட்டியலை இப்கோ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்” என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

விலை உயர்வை கைவிட்டு விவசாயிகளுக்கு குறைவான விலையில் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com