மயிலாடுதுறை: துர்நாற்றம் வீசும் பயிர்களை அப்புறப்படுத்த பணமில்லை; புலம்பும் விவசாயிகள்

மயிலாடுதுறை: துர்நாற்றம் வீசும் பயிர்களை அப்புறப்படுத்த பணமில்லை; புலம்பும் விவசாயிகள்
மயிலாடுதுறை: துர்நாற்றம் வீசும் பயிர்களை அப்புறப்படுத்த பணமில்லை; புலம்பும் விவசாயிகள்

சீர்காழி அருகே விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் உள்ள சம்பா பயிர்களை குடும்பத்தினரோடு சேர்ந்து அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில சீர்காழி, கொள்ளிடம், நல்லூர், குன்னம், கொண்டத்தூர், ஆச்சாள்புரம், கொண்டல், அத்தியூர், திட்டை, பெரம்பூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட 20 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி மழைநீரில் மூழ்கி அழுகியும், முற்றிய கதிர்கள் முளைத்தும் பாதிக்கபட்டுள்ளது.

நிவர், புரெவி என அடுத்தடுத்த புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை உரங்கள் இட்டும் மருந்து அடித்தும் விவசாயிகள் காப்பாற்றி வந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தமிழக முதல்வர் ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் அந்த தொகையும் பாதிப்புக்கு தக்கவாறு 2000 முதல் 6400 வரை மட்டுமே வழங்கபட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.


இந்நிலையில் பருவம் தவறிய இந்த மாதம் பெய்த கனமழையால் அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி அழுகியது. கடைமடை என்பதால் மழை விட்டும் இந்த தண்ணீர் இதுவரை வடியாத நிலையில் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். புளிச்சக்காடு கிராமத்தில் பாடுபட்டு வளர்த்த பயிர்கள், நிலத்தில் அழுகியும் முளைத்தும் பயனற்று கிடப்பதை கண்டு மனம் கலங்கிய விவசாயிகள் அந்த பயிர்களை அகற்றும் பணியை துவங்கியுள்ளனர்.

அரசு வழங்கிய இழப்பீடு அழுகிய பயிர்களை அகற்றக்கூட போதாது என கூறிய விவசாயிகள் தங்கள் குடும்பத்தினரோடு அழுகிய பயிர்களை அகற்றி வருகின்றனர். சாகுபடி பணியின் போதே உழவு பணிகளுக்கு உரிய தொகை வழங்க முடியாத விவசாயிகள் அழுகிய பயிர்களை அகற்ற வேலை ஆட்களுக்கு கூலி வழங்கக்கூட தங்களிடம் பணம் இல்லாததால் குடும்பத்தினரோடு பயிர்களை அகற்றி வருவதாக கண்ணீரோடு தெரிவித்தனர்.


இதில் உள்ள கதிர்கள் கருத்து போயும் முளைத்தும் துர்நாற்றம் வீசுவதால் எதற்கும் உதவாது எனவும் கால்நடைகளுக்கு தீவனத்திற்கு கூட ஆகாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு முழு ஆய்வுசெய்து கூடுதல் இழப்பீடும் 100 சதவீத காப்பீடும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com