மயிலாடுதுறை: காத்திருக்கும் நெல் மூட்டைகள்; நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

மயிலாடுதுறை: காத்திருக்கும் நெல் மூட்டைகள்; நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை
மயிலாடுதுறை: காத்திருக்கும் நெல் மூட்டைகள்; நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். அத்துடன் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய 4 தாலுகாக்களில் நிலத்தடிநீர் மற்றும் ஆற்றுப்பாசனம் மூலம் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது குறுவை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆண்டுதோறும் குறுவை சாகுபடி நெல்லை கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கோனேரிராஜபுரம், சிவனாகரம் உள்ளிட்ட 28 கிராமங்களில் மட்டுமே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை மாவட்டத்தில் பல்வேறு அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து அடுக்கி வைத்து காத்து வருகின்றனர். ஆனால், பெயரளவிற்கு மட்டுமே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், திறக்கப்பட்ட பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவில்லை என்று குற்றம்சாட்டும் விவசாயிகள் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு அளித்துள்ளனர்.

நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருவதாகவும், இதனால் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் கூறும் விவசாயிகள், உடனடியாக மாவட்ட நிர்வாகம் நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com