அரசின் மெத்தனத்தால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்: தினகரன் வேதனை
டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளார் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”எடப்பாடி பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த சில நாட்களாக விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நெல் கொள்முதல் தொடர்பாக விடுத்து வரும் கோரிக்கைகளை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், உண்மை நிலவரத்தை மறைத்து பேட்டி கொடுப்பதில் மட்டுமே உணவுத்துறை அமைச்சர் ஆர்வம் காட்டியதன் விளைவுதான் இது.
இதற்கு மேலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள்முதலை விரைவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக முதல்வரின் மெத்தனத்தால் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்”என்று தெரிவித்துள்ளார்