குறைந்த செலவில் நிறைவான லாபம்: பட்டுப்புழு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி
வறட்சி காரணமாக விவசாயம் முற்றிலும் முடங்கியதால், ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கணிசமான லாபமும் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பட்டுப்புழு வளாப்பில் ஆர்வம் காட்டி வருவதுடன், 132 ஏக்கரில் பட்டுப்புழு வளர்க்க மல்பெரி செடியையும் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சியின் காரணமாக கரும்பு, கடலை, நெல், பருத்தி மற்றும் சோள விவசாயத்திற்கு மாறிய இவர்கள், செலவுக்கு ஏற்ற வருவாய் ஈட்ட முடியாததாலும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைக்காத காரணத்தாலும் விவசாயம் சார்ந்த மாற்றுத்தொழில் செய்ய முடிவெடுத்தனர். மத்திய, மாநில அரசுகள் பட்டு வளர்ச்சித் துறைக்கு பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்ததும் அவர்களின் முடிவுக்கு முக்கியக் காரணமாகும்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "பட்டுப்புழுவுக்கு உணவான மல்பெரி செடியை நடவு செய்யவும் அரசு மானியம் தருவதால் இத்தொழில் செய்வதற்கு வசதியாக உள்ளது. அதிகபட்சமாக மல்பெரி செடி வளர்ப்புடன் சேர்த்து 55 முதல் 60 நாட்களில் ஒரு பருவ பட்டுப்புழு உற்பத்தி கூட்டை பெற முடியும். இதில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும்" என்கின்றனர்.
பட்டுப்புழு சாகுபடிக்கும், அதில் ஈடுபடும் விவசாயிகள் குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் காப்பீடு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த செலவில் நிறைவான லாபம் கிடைப்பதால் நிம்மதியாக இருப்பதாக பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.

