“உருவபொம்மை எரிப்பு, ரயில்மறியல்” - லக்கிம்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் அறிவிப்பு

“உருவபொம்மை எரிப்பு, ரயில்மறியல்” - லக்கிம்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் அறிவிப்பு
“உருவபொம்மை எரிப்பு, ரயில்மறியல்” - லக்கிம்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் அறிவிப்பு

லக்கிம்பூர் கெரியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உருவபொம்மை எரிப்பு, ரெயில் மறியல், மகாபஞ்சாயத்தை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

லக்கிம்பூர் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், எஃப்..ஆரில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், "லக்கிம்பூரில் நடந்தது ஜாலியன் வாலாபாக் கொடுமைக்கு குறைவானது இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலுமிருந்து விவசாயிகள் அக்டோபர் 12 ம் தேதி லக்கிம்பூர் கேரியை வந்தடைவார்கள். மேலும் அனைத்து அமைப்புகளும் நாடு முழுவதும் தங்கள் ஊர்களில் அக்டோபர் 12ஆம் தேதி இரவு 8 மணிக்கு மெழுகுவர்த்தி பேரணி நடத்தவேண்டும்" என தெரிவித்தார்.

மேலும், “அக்டோபர் 15 ஆம் தேதி தசரா அன்று அனைத்து விவசாயிகளும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மைகளை எரிப்பார்கள். அக்டோபர் 18 அன்று நாங்கள் "ரெயில் மறியல்" போராட்டம் மற்றும் அக்டோபர் 26 ஆம் தேதி லக்னோவில் ஒரு பெரிய மகாபஞ்சாயத்து நடைபெறும்" என்று தெரிவித்தார்.

அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு எஸ்யூவி கார் விவசாயிகள் மீது மோதிய போது ஆஷிஷ் மிஸ்ரா அந்த காரில் இருந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சூழலில் நேற்று காவல்துறையின் சம்மனுக்கு ஆஜராகாத ஆஷிஷ் மிஸ்ரா, இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த வழக்கை கையாண்டது தொடர்பாக உபி அரசு மற்றும் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகு மத்திய அமைச்சரின் மகனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com