\
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் ஏர் கலப்பை போராட்டம்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் ஏர் கலப்பை போராட்டம்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் ஏர் கலப்பை போராட்டம்
Published on

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் ஏர் கலப்பைகளை கையில் ஏந்தியவாறு விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் வணிகர்கள் கடையடைப்பு செய்துள்ளதோடு திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் திமுகவினர் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஏர் கலப்பைகளை கையில் ஏந்தியவாறு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com