உலக தேனீ நாளை முன்னிட்டு தேனீக்களை அழியாமல் காக்கவும் ,தேனீ வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் நாகர்கோவிலில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
உலக தேனீ தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள் மற்றும் தேனீ விவசாயிகள் பங்கேற்ற தேனீ வளர்ப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. உலக தேனீ தினம், ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மற்றும் தேசிய தேனீ வாரியத்தின் துணையோடு சிறப்பான முறையில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நாகர்கோவிலில் நடைபெற்ற கருத்தரங்கில் 200 விவசாயிகள் கலந்து கொண்டனர். தேனீ வளர்பவர்களை ஊக்கபடுத்தும் வகையில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது. மனிதன் உயிர் வாழ மறைமுகமாக முக்கிய பங்கு வகிக்கும் தேனீ இனம் அழியாமல் காக்க வேண்டும் என கருத்தரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேனீ வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளையும், தேனீ வளர்ப்பிற்கென அரசு சிறப்பு சலுகைகள் வழங்கி வருவது குறித்தும் கருத்தரங்கில் விளக்கப்பட்டது.
தேனீ வளர்ப்பவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பல்வேறு வகை தேன் மற்றும் தேனால் செய்யப்பட்ட பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பொது மக்களுக்கு சுத்தமான தேனுக்கும், கலப்பட தேனுக்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.