"வேளாண்மை முழுமையாக தனிப்பெருமுதலாளிகளுக்கு தாரைவார்ப்பு”: சீமான் கண்டனம்
வேளாண்மையை முழுமையாக தனிப்பெருமுதலாளிகளுக்கு தாரைவார்த்து விவசாயிகளை சுரண்ட முற்படுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ மாநிலப்பட்டியலிலுள்ள வேளாண்மை குறித்து மாநிலங்களின் இசைவோ கலந்தாலோசனையோயின்றி எதேச்சதிகாரப்போக்கோடு சட்டமியற்றுவதும், மக்களின் எதிர்ப்பையும்மீறி நிறைவேற்றுவதும், வேளாண்மையை முழுமையாக தனிப்பெரு முதலாளிகளுக்கு தாரைவார்த்து விவசாயிகளை சுரண்ட முற்படுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது.
யாவற்றையும் ஒற்றைமயப்படுத்தும் மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோதப்போக்கின் நீட்சியே ஒற்றை உணவுச்சந்தையை ஏற்படுத்த முனையும் வேளாண்மைச் சட்டங்களாகும். 130 கோடி மக்களின் உணவைத் தீர்மானிக்கும் வேளாண்மையைப் பெருநிறுவனங்களிடம் மொத்தமாய் கையளிப்பது நாட்டின் இறையாண்மைக்கே பேராபத்தாகும்.குடிமக்களின் உணவுரிமையை நிலைநாட்டவும், வேளாண்மையில் தற்சார்பை மீட்டெடுக்கவும் இக்கொடுஞ்சட்டங்களை எதிர்த்து நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என அறைகூவல் விடுக்கிறேன்” என்கிறார்