தமிழகத்தில் தடுப்பணைகள் இல்லாத காரணத்தால் ஆண்டுதோறும் 20 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர் வீணாகிறது என இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீர் பற்றாக்குறை காரணத்தால் விவசாயம் பெரிதளவும் பாதிப்படைந்துள்ளது. ஆண்டுதோறும் போதுமான அளவு தமிழகத்தில் மழை பொழியும் போதிலும், அவற்றை சேமிப்பதற்கு போதுமான தடுப்பனைகள் இல்லாத காரணத்தாலும், ஏரிகள் மற்றும் குளங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் மழை நீர் பெரும்பாலும் வீணாகிவிடுகிறது. இதேபோன்று கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் காவேரி நீரும் தடுப்பணைகள் இல்லாத காரணத்தால் கடலில் கலந்து வீணாகிறது.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத் தலைவர் கே.பி.ராமலிங்கம், விவசாயம், நதிநீர் உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் சரியான கண்காணிப்புகள் இல்லாத காரணத்தால் மக்களை சென்றடையவில்லை என குற்றம் சாட்டினார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் போதுமான தடுப்பனைகளை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தற்போது உள்ள தமிழக அரசிற்கு பலம் இருக்கிறதா என்பதை சட்டசபையில் பெரும்பான்மை நிரூபித்து உறுதிபடுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் தற்போதைய சூழலில் நீர்நிலைகளை பாதுகாக்க யார் ஒரு புது கட்டமைப்பை உருவாக்குவார்களோ அவர்கள் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.