விவசாய சட்டங்களுக்கு ஆதரவு - எதிர்ப்பு : முதல்வர் V/S எதிர்கட்சி தலைவர் யார் கருத்து சரி?
புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து தமிழக முதல்வரும், எதிர்த்து எதிர்கட்சி தலைவரும் வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இதில யாருடைய கருத்து சரி என புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் விவாரதம் நடைபெற்றது. அதன் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆரவாக பலரும் போராடி வருவதோடு தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசுக்கும் போராட்டா குழுவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் வரும் 9ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்பட பேசு நிகழ்ச்சியில் விவசாயத்திற்கு பாதிப்பில்லை - முதலமைச்சர், விவசாயத்தை சீரழிக்கும் சட்டங்கள் - எதிர்கட்சி தலைவர் யார் கருத்து சரி என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை தம்பி தமிழரசன் நெறிப்படுத்தினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக அஇஅதிமுக செய்தி தொடர்பாளர் குறளார் கோபிநாதன், திமுகவின் செய்தி தொடர்பாளர் அப்பாவு, அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி, மூத்த பத்திரிகையாளர் கணபதி ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாதங்களை பதிவு செய்தனர்.
அப்பாவு (திமுக செய்தி தொடர்பாளர்)
கேள்வி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி முதலமைச்சர் பழனிசாமி பாவமன்னிப்பு தேடிக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியிருக்கிறார். பாவமன்னிப்பு தேடிக்கொள்ளும் அளவுக்கு வேளாண சட்டத்தை ஆதரிப்பது அவ்வளவு பெரிய பாவமா? திமுக அப்படித்தான் நினைக்கிறதா?
அப்பாவு: ஏழை விவசாயிகள் மிக மிக மிக ஏழையாகத்தான் போயிக்கிட்டு இருக்காங்க. மோடி அவர்கள் ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னால் தேர்தல் அறிக்கைல விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக ஆங்குவேன் என்றார்கள். எம்.எஸ்.சுவாமி நாதனின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக சொன்னாங்க. ஆனால் ஆறாண்டுகால ஆட்சியில எதையுமே அவங்க செய்யல. அதனால விவசாய மக்கள் பாதிக்கப்படுறாங்க.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள விவசாயிகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் சிறு,குறு, நடுத்தர விவசாயிகள்தான். அதற்கு மேல் இருப்பவர்களில் 10 சதவீதம் பேர்தான் பெரிய விவசாயிகளாக இருப்பார்களே தவிர மீதி எல்லாருமே சிறு.குறு விவசாயிகள்தான். இந்த வேளாண் சட்டம் என்ன சொல்லுது என்பது எல்லோருக்குமே தெரியும்.
விவசாயிகள் ஒரு கர்பரேட் கம்பெனியோட ஒப்பந்தம் போட்டுகணும்னு சொல்றாங்க. இப்ப நான் இரண்டு ஏக்கர்ல நெல் பயிரிடுவதாக இருந்தால் ஒரு கார்பரேட் அதானி கம்பெனியோட அக்ரிமெண்ட் பண்ணிர்றேன். 2000 ரூபாய்க்கு நெல்;லை வாங்கிக் கொள்வதாக அக்ரிமெண்ட் போடுறாங்க. ஆனா நெல்லு ஈரப்பதமா இருக்கு, நல்லா இல்ல, குவாலிட்டி இல்ல. 1500 தான் தருவோம் என்று சொன்னா சிறு,குறு விவசாயி குற்றச்சாட்டை கொண்டுகிட்டு எங்க போகமுடியாது.
இந்த வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்னு போறபோக்குல சொல்லிக்கிட்டே போறாரு. உண்மையிலேயே முதல்வர் ஒரு விவசாயியாக இருந்தா இப்படி சொல்ல மாட்டாரு. இந்த சட்டத்துல குறைந்த பட்ச விலை என்பது எழுதப்படவில்லை. மாநில ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இருக்கும் இல்லை என்பதை சட்டத்துல சொல்லல. இந்தியாவுல உற்பத்தி ஆகக்கூடிய எல்லா பொருட்களுக்கும் ஒரு குறைந்த பட்ச விலையை நிர்ணயம் செய்துவிட்டு கர்பரேட் கம்பெனியிடம் சொல்லுங்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளையும் கூட்டி பொருட்களின் உற்பத்தி செலவு எவ்வளவு. அந்த உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் லாபத்துடன் விலையை நிர்ணயம் செய்து கார்பரேட் கம்பெனியுடன் ஒப்பந்தம் போடச் சொல்லுங்கள். அதை எதையும் செய்யாமல் கார்பரேட் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னால் அது நியாமா. என்று கேள்வி எழுப்பினார்.
குறளார் கோபிநாதன் (அதிமுக செய்தி தொடர்பாளர்)
கேள்வி: திமுகவில் இருந்து உங்களை நோக்கி வைக்கக் கூடிய விமர்சனம் என்னவென்றால் புரிதல் இல்லாமல் வேளாண் சட்டங்களை முதலமைச்சர் ஆதரிக்கிறார் இல்லையென்றால் அதை புரிந்து கொண்டே மத்திய அரசு கொடுக்கக் கூடிய அழுத்தத்தால் ஆதரிக்கிறரா?
குறளார் கோபிநாதன்: இந்த வேளாண் சட்டம் தமிழக விவசாயிகளுக்கு பொருந்துமா பொருந்தாதா என்று கவலைபடாமல் வேண்டுமென்றே விவசாயிகளின் நலனை காக்குகின்ற இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். உலகத்தின் முதன்மையானது உழவுத் தொழில் அதனால்தான் தமிழகத்தில் ஒரு விவசாயி முதல்வராக வர முடிகிறது. அவர்தான் இன்று விவசாயிகளை பாதுகாக்கும் முதலமைச்சராக இருந்து கொண்டிருக்கின்றார்.
இந்த புதிய வேளாண் சட்டங்களை முதன்மையாக எதிர்க்கின்ற மாநிலம் பஞ்சாப். இது காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலம். இதைத்தான் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார். 2011ஆம் ஆண்டு கமிட்டி போட்டபோது கமிட்டியில் உறுப்பினராக இருந்த இப்போதைய பஞ்சாப் முதல்வர் அப்போது எதிர்க்காமல் இன்றைக்கு எதிர்க்கிறார்கள் என்று சொன்னால் இது அரசியலா இல்லையா என்று நாங்கள் கேட்கவில்லை டெல்லி முதல்வர் கேட்கிறார்.
ஒவ்வொரு மாநில அரசும்தான் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டத்தில் எந்த இடத்திலாவது பொருட்களின் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயத்தை எடுத்துவிட்டோம் என்று இருக்கிறதா சொல்லுங்கள். இந்த சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக எந்த சரத்தாவது இருக்கிறதா. அப்படி இருந்தால் காட்டுங்கள். அது உண்மையாக இருக்குமானல் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். அதனால் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.
கணபதி (மூத்த பத்திரிகையாளர்)
கேள்வி: திமுக விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இதை ஒரு தேர்தல்கால அரசியலா பாக்குறதா இல்லை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக அக்கறையான அரசியல் என்று பார்ப்பதா?
பதில்: இந்த புதிய வேளாண் சட்டத்தில் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆராத விலையைப் பற்றி சொல்லவே இல்லை. அதனால்தான் பஞ்சாப் விவசாயிகள் போராடுறாங்க. ஒரு காங்கிரஸ் கட்சி சொல்லி போராடுவதற்கு விவசாயிகளுக்கு என்ன பைத்தியமா பிடித்துருச்சு. இல்லை காங்கிரஸ் கட்சி அவ்வளவு பெரிய கட்சியாகவா இருக்கு. நாம விவசாயிகளின் உணர்வுகளை கொச்சைப் படுத்துகிறோம்.
இந்த புதிய வேளாண் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு ஒரு மாதிரி சட்டத்தை மத்திய அரசாங்கம் எல்லா மாநில அரசாங்கத்திற்கும் அனுப்பியது. அந்த மாதிரி சட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு முதன் முதலில் சட்டசபையில் நிறைவேற்றிய கட்சி அதிமுகதான். கடந்த 2019ஆம் ஆண்டே பண்ணை ஒப்பந்த சட்த்தை நிறைவேற்றி விட்டார்கள். ஆனால் அது அமலுக்கு வராததால் அதனுடைய வீரியம் நமக்குத் தெரியவில்லை.
இந்திய உணவுக் கழகம் என்றைக்கு நெல் கொள்முதல் பண்ணமாட்டேன் என்று சொல்லப்போறானோ அன்றைக்குதான் நமக்கு பிரச்னைவரும். தமிழக அரசால் மொத்த நெல்லையும் கொள்முதல் செய்ய முடியாது. அப்பபோயி ஒரு கார்பரேட் கம்பெனியிடம் ஒப்பந்தம் போடு என சொல்லும் போது. எந்த பாதுகாப்பும் கிடையாது. நெல்லுக்கான ஆதாரவிலை கிடையாது. மாறாக அவன் வைத்ததுதான் சட்டமாக இருக்கும். இந்த புதிய வேளாண் சட்டத்தால் சிறு.குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.
ஸ்ரீராம் சேஷாத்ரி (அரசியல் விமர்சகர்)
கேள்வி: விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு நம்மைதரும் என்று பிரதமர் மற்றும் தமிழக முதல்வரும் சொல்லி வருகிறார்கள். அப்படி விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய சட்டம் என்றால் டெல்லியில் விவசாயிகள் ஏன் கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: இந்த பிரச்னைகள் நடப்பதற்கு முக்கிய காரணம் உணவு பற்றாக்குறை வந்த போது பசுமை புரட்சி கொண்டுவரப்பட்டது. அப்போது பஞ்சாப்தான் முதன் முதலில் ஆய்வு மாநிலமாக வந்தது. இப்போது மொத்தம் 1500 கிராமங்கள் பஞ்சாப்பில் இருக்கிறது. ஒரு கிராமத்தில் 250 ஏஜெண்டுகள் இருக்காங்க. இப்படியாக 3லட்சத்து 30ஆயிரம் இடைத்தரகர்களுக்கு இந்த புதிய வேளாண் சட்டங்களால் வருமானம் போய்விடும்.
அதனாலதான் பஞ்சாப்ல இதைஒரு பிரச்னையா எடுத்துக்கிட்டு வர்றாங்க. அதனால் இந்த போராட்டத்தில் இடைத்தரர்களோ அல்லது இடைத்தரகர்களின் பிடியில் இருக்கும் விவசாயிகளோ பங்கேற்று இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சட்டத்தை நன்றாக படித்துவிட்டு இந்த இடத்தில் குறையிருக்கிறது என்று சொல்லச் சொல்லுங்கள் அதற்கு நான் பதிலளிக்கிறேன். பொத்தம் பொதுவாக எதையும் சொல்லக்கூடாது என்று பேசினார்.