ஜெயலலிதா எழுப்பிய கோட்டை... டெல்டாவில் அதிமுக கோட்டைவிட்டது எப்படி? - ஓர் அலசல்

ஜெயலலிதா எழுப்பிய கோட்டை... டெல்டாவில் அதிமுக கோட்டைவிட்டது எப்படி? - ஓர் அலசல்
ஜெயலலிதா எழுப்பிய கோட்டை... டெல்டாவில் அதிமுக கோட்டைவிட்டது எப்படி? - ஓர் அலசல்

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 டெல்டா மாவட்டங்களிலுள்ள 41 தொகுதிகளில் வெறும் 4-இல் மட்டுமே வென்று கிட்டத்தட்ட வாஷ்-அவுட்டாகியிருக்கிறது அதிமுக.  விவசாயிகளின் எதிர்ப்புதான் இந்தப் படுதோல்விக்கு காரணமா? -- இதோ ஓர் அலசல்...

மத்திய மண்டலம், சோழமண்டலம் என்று அழைக்கப்படும் டெல்டா மண்டலம் திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை என 9 மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த டெல்டா பகுதிகள் காலம் காலமாக திமுக மற்றும் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாகவே இருந்தன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்த மண்டலத்தில் கூடுதல் கவனமெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக டெல்டாவில் அதிமுகவை பலப்படுத்தினார்.

2001 தேர்தலுக்கு பின்னர் கணிசமாக டெல்டா மண்டலத்தில் வெற்றியை பதிவு செய்ய தொடங்கியது அதிமுக. 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள  41 தொகுதிகளில் 32 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. மீண்டும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக டெல்டா மண்டலத்தில் 23 தொகுதிகளைக் கைப்பற்றியது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த ஒன்பது மாவட்டங்களில் வெறும் 4 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போது டெல்டா மண்டலத்தில் வெற்றி பெற்ற நால்வருமே அதிமுகவின் முக்கிய புள்ளிகள்தான். விராலிமலையில் விஜயபாஸ்கர், நன்னிலம் ஆர்.காமராஜ், ஒரத்தநாடு வைத்திலிங்கம், வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன் என நான்கே பேர்தான் தற்போது வென்றவர்கள். 'இவர்கள் நான்கு பேருமே பெரிய அளவில் பொருட்செலவு செய்ததால்தான் வெற்றிபெற்றார்கள்; இல்லையென்றால் இவர்களும் தோல்வியடைந்திருப்பார்கள்' என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்டா மண்டலத்தில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் 10,000 முதல் 20,000 வாக்குகள் வரை வாங்கியுள்ளனர். அமமுகவும் பாபநாசம், மன்னார்குடி, திருவையாறு உள்ளிட்ட பல தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகளை பிரித்துள்ளனர்.

'டெல்டா பகுதி என்பது முழுக்கவும் விவசாயத்தை ஆதாரமாக கொண்ட பகுதி. எனவே, இந்தப் பகுதியில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வி என்பது, அதிமுக மீதான நம்பிக்கையை விவசாயிகள் இழந்துவிட்டதையே காட்டுகிறது.

மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மும்மரமாக இருந்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை விவசாயிகள் விரும்பவில்லை. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல், கஜா புயலின்போது உதவி செய்யாதது, விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்காதது, உரங்களின் விலை உயர்வு, மூன்று வேளாண் சட்டங்கள் என அதிமுக - பாஜக கூட்டணியின் பல்வேறு செயல்களும் விவசாயிகளிடம் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. கடைசி நேரத்தில் கடன் தள்ளுபடி, நிவாரணம் அளித்தும் கூட விவசாயிகளில் கோபம் குறையவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது' என்பது அரசியல் நோக்கர்களின் பார்வை.

இதுபற்றி பேசிய மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், “எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதனால் விவசாயிகள் அனைவரும் அவரை கொண்டாடினார்கள், மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால், அவர் மீண்டும் நாகப்பட்டினத்தில் மிகப்பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க அனுமதி தந்தார். ஓஎன்ஜிசி பல ஆலைகளை அமைத்துக்கொண்டே இருந்தது. கெயில் குழாய்களை பதித்துக்கொண்டே இருந்தனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த கண்துடைப்பு அறிவிப்பு ஏமாற்று செயலால் விவசாயிகள் மிகவும் கொதிப்படைந்தனர்.  

அதுபோல டெல்டாவையே புரட்டிபோட்ட கஜா புயலின்போதும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை. மேலும், மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்கள், செயல்பாடுகளையும் அதற்கு ஒத்துழைத்த அதிமுகவை விவசாயிகள் நிராகரித்துள்ளனர். திமுக கடந்த சில ஆண்டுகளாக கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் விவசாயிகளுடன் கலந்துகொண்டு ஆதரவளித்தனர். இதனால் விவசாயிகள் திமுகவுக்கு வாக்களித்தனர்.

கடைசி நேரத்தில் கூட்டுறவு கடன் தள்ளுபடி, நிவர் புயல் நிவாரணம் போன்றவற்றை செய்ததால்தான் டெல்டாவில் அதிமுக டெபாசிட் வாங்கியுள்ளது. இல்லையென்றால் டெபாசிட்டே போயிருக்கும். முக்கியமாக பிரதமர் மோடியை, பாஜக அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்ததும் மிகப்பெரிய தோல்விக்கு காரணம். அமமுகவும் டெல்டாவில் அதிமுக வெற்றியை தடுத்திருக்கிறது” என்று கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொஞ்சம் கொஞ்சமாக டெல்டாவில் கட்டியெழுப்பிய அதிமுகவின் வெற்றிக்கோட்டை தற்போது சுக்குநூறாக உடைந்து கிடக்கிறது என்பதுதான் கள நிலவரம்.

வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com